Saturday, August 20, 2016

பூச்சிக்கடிக்கு மருந்து!!!

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…

தேள் கடி மருந்துகள்

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும். குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறி நாய் கடித்து விட்டால்

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்பு கடித்து விட்டால்

உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க

நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.

இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும்.

வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு.

Monday, August 1, 2016

எடை குறைக்க உதவும் சீரகம் !!!

சீரகம் தரும் வரம் தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை எடை குறைக்க முடியும்...!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடி மற்றும் தயிர்

மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

சீரகப் பொடி மற்றும் தேன்

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

சூப்புடன் சீரகப் பொடி

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

தொப்பையைக் குறைக்கும் சீரகம்

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

சீரகத்தின் வேறுசில நன்மைகள்

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.